You are currently viewing 12th Tamil Unit 1 Book Back Question & Answer 2025

12th Tamil Unit 1 Book Back Question & Answer 2025

12th Tamil Unit 1 Book Back Question & Answer 2025

12th Tamil Unit 1 Book Back Answer Guide New Syllabus

HSC 2nd year / +2 Tamil Unit 1 New syllabus book back question and answer. Tamil Nadu Board 12th Standard Tamil – Unit 1: Book Back Answers and Solutions

12th Book back answers and solutions for Unit 1 // இயல் 1 உயிரினும் ஓம்பப் படும் 12th Standard Tamil textbook. These detailed answers have been carefully. 

We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Class 12 Lesson 1 – Unit 1 along with the corresponding book back questions and answers PDF format. Question Types Covered, 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following, 2 Mark Questions: Answer briefly, 3, 4, and 5 Mark Questions: Answer in detail. 12th All Unit Guide [ unit 1 to 8 ] 2024

 

இயல் 1 உயிரினும் ஓம்பப் படும், தன்னனேர் இலாத தமிழ்*, நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர், இளந்தமிழே!, தம்பி நெல்லலையப்பருக்கு, தமிழாய் எழுதுவோம் – all topic book back answer. 

 

12th Tamil Unit 1 Book Back Question & Answer 2025

இயல் 1 – திறன் அறிவோம்

பலவுள் தெரிக.

1. ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூ நூல்

அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறித்துவமும் தமிழும்

விடைகுறிப்பு: ஈ) கிறித்துவமும் தமிழும்

2. “மீண்டு மந்தப் பழமைநலம் புதுக்குதற்கு” – கவிஞர் குறிப்பிடும் பழமைநலம். என்பது

1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
2) பொதிகையில் தோன்றியது
3) வள்ளல்களைத் தந்தது

அ) 1 மட்டும் சரி
ஆ) 1,2 இரண்டும் சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) 1, 3 இரண்டும் சரி

விடைகுறிப்பு: ஈ) 1, 3 இரண்டும் சரி

3. “மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!”-இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயங்களைத் தேர்க.

அ) அடிமோனை, அடிஎதுகை
ஆ) சீர்மோனை, சீர்எதுகை
இ) அடிஎதுகை, சீர்மோனை
ஈ) சீர்எதுகை, அடிமோனை

விடைகுறிப்பு: இ) அடிஎதுகை, சீர்மோனை

4. “செம்பரிதி…” எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு

அ) ஒளிப்பறவை
ஆ) நிலவுப்பூ
இ) சர்ப்பயாகம்
ஈ) சூரியநிழல்

விடைகுறிப்பு: ஈ) ஆ) நிலவுப்பூ

5. மயிலை சீனி. வேங்கடசாமி சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு

அ) மத்த விலாசம்
ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) அஞ்சிறைத் தும்பி
ஈ) திசை எட்டும்

விடைகுறிப்பு: இ) அஞ்சிறைத் தும்பி

 

குறு வினா

1. ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ நூல் பற்றிக் குறிப்பு வரைக.

  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்பது கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் நூல்.
  • தமிழக அரசின் முதற் பரிசினைப் பெற்ற நூல்.
  • தமிழ்ச் சமூகம் மறந்துபோன பழைய அழகுக் கலைச்செல்வங்களின் பெருமையை அறிய வைப்பதற்காக மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட நூல்

2. “விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்” – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?

  • மயிலை சீனி. வேங்கடசாமியைப் பற்றிப் பாரதிதாசன் கூறியதாகும்.
  • தமிழ் இலக்கியம், கலை, தமிழர் வரலாறு, தமிழ்மொழி ஆய்வு சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதித் தமிழின் சிறப்பை அறியச் செய்தவர் மயிலை. சீனி. வேங்கடசாமி.
  • எனவேதான், பாரதிதாசன் மயிலை சீனி. வேங்கடசாமியை, தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்வதொன்றை மட்டுமே உயிர்ப்பணியாகக் கொண்டவர் என்று கூறுகிறார்.

3. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

  • தங்கள் கைகள் செந்நிறத்து வானம்போலச் சிவந்திட உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வை வெள்ளம், அவர்களின் திரண்ட தோள்மீது முத்துமுத்தாய் வீற்றிருக்கும்.
  • இந்த அழகினை வியந்து பாடத் தமிழின் துணை வேண்டும் என்கிறார் கவிஞர் சிற்பி.

4. விடியல், வனப்பு – இரு சொற்களையும் ஒருங்கே அமைத்து ஒரு தொடர் எழுதுக.
இருள் விலகி விடியல் வந்தது.

  • இயற்கையின் வனப்பு வெளிப்பட்டது.
    புலர் விடியல் வந்தபோது பறவைகள் பறந்த காட்சி வனப்பு மிக்கதாக இருந்தது.

 

சிறு வினா

1. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.

  • கி. பி. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி. பி. 1ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் 1950களில் ஈடுபட்டார்.
  • மகேந்திரவர்மன், நரசிம்ம வர்மன், மூன்றாம் நந்திவர்மன் ஆகிய பல்லவ மன்னர்கள் குறித்த நூல்களைப் படைத்தார்.
  • சங்ககால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறுகளை ஆய்வு செய்து எழுதினார்.
  • தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்பட்ட களப்பிரர்கள் காலத்தை விரிவாக ஆய்வுசெய்து, ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூலை வெளியிட்டார்.

2. “செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்” தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

மாலைக் கதிரவன், மலை முகட்டின்மீது தலையைச் சாய்க்கின்றான். கதிரவனின் செம்மஞ்சள் நிறம், வானம் முழுவதும் பூக்காடுபோலப் பரவிப் படர்ந்துள்ளது.
இயற்கை ஓவியன் புனைந்த அழகிய செந்நிறத்துப் பூக்காடாக வானம் தோன்றுவதற்கு மாலை நேரத்துக் கதிரவன் காரணமாக அமைந்துள்ளான் என்பதை இத்தொடர் அழகாக வெளிப்படுத்துகிறது.

நாள் முழுதும் உழைத்துக் களைத்தக் கதிரவன் தலைசாய்த்ததால் அந்தி வானம் பெற்ற சிவந்த நிறமும், அன்றாடம் உழைத்து வாழும் உழைப்பாளிகளின் கை வண்ணமும் ஒன்றே என்பதைக் கவிஞர் சிற்பியின் இவ்வரிகள் நயமாகக் காட்சிப்படுத்துகின்றன.

3. “ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்:
இப்பாடல் வரி, ‘தண்டியலங்காரம்‘ என்னும் அணி இலக்கண நூலின் பொருளணி யியலில் இடம் பெற்றுள்ள உரைமேற்கோள் பாடல் அடியாகும்.

பொருள்:
ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகின் இருளை அகற்றும் என்பதே இத்தொடரின் பொருளாகும்.

விளக்கம்:
எப்போதும் ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த உலகின் இருளை அகற்றும் கதிரவன், மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, சான்றோரால் தொழப்படுகின்ற ஒன்றாகும். தமிழோ, பொதிகை மலையில் தோன்றினாலும் மக்களின் அறியாமை இருளை அகற்றும் சிறப்புடையது.

 

4. பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே!

– நன்னூல்.

மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வா,வா!

– சிற்பி பாலசுப்பிரமணியம்.

நன்னூல்:

ஒருமொழியில், பல்வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களை நோக்கின் பழைய சொல்வழக்குகள் அழிதலும், புதிய சொல்வழக்குகள் தோன்றுதலும் ஆகிய இப்பண்பு இடம் பெற்றிருக்கும்.

சிற்பி பாலசுப்பிரமணியம் :

நாட்டின் வளர்ச்சியில் புதுமையை ஏற்றதனால் தமிழ்நாட்டின் பண்டைய பழக்க வழக்கங்கள், வாழ்வியல் நெறிமுறைகள், மொழிப் பயன்பாடு என எல்லாம் சிதைந்து மாறிவிட்டன.

நன்னூல்:

கால மாற்றத்திற்கு ஏற்ப மொழியில் பழையன எல்லாம் அழிவதும் புதியன எல்லாம் புகுவதும் போற்றற்குரியன.

சிற்பி பாலசுப்பிரமணியம்:

புதியவற்றுக்கு வழிவிட்டதனால் பழமைநலம் சிதைவுற்று அழிந்து விட்டது. பழமையானதானாலும் பண்டைய பண்பாடும் ஒழுக்கநெறிகளும் தளிர்க்கத் தமிழ்க்குயிலே நீ மீண்டும் கூவி வர வேண்டும்.

 

நெடு வினா

1. மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்பதனைச் சான்றுகளுடன் நிறுவுக.

முன்னுரை:

மயிலையார் சீனி. வேங்கடசாமி, இளமையிலேயே தமிழின்மீது தீராத பற்றுக் கொண்டவர். கட்டுரையோ, நூலோ எழுதும்முன் தரவுகளைச் சேகரித்து, ஐயமிருப்பின் ஆன்றோர்களிடம் கேட்டுத் தெரிந்து தெளிந்த பிறகு புத்தகம் வெளியிடுவார். அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகம் அவருக்குத் தாய்வீடு போன்றிருந்தது.

பல்துறை அறிஞர்:

ச. த. சற்குணர் உரையால் முதல் நூலான ‘கிறித்தவமும் தமிழும்’ உருவானது. கல்வெட்டு ஆய்வில் அதிகம் பயிற்சி பெற்றவர். தமிழ் எழுத்தியலை நன்கு உணர்ந்தவர். மன்னர்கள் பற்றிய ஆய்வும், தரவும் இவரால் வெளியிடப்பட்டன. கலையியல் சார்ந்த தமிழில் வெளியான பல நூல்களுக்கு இவரே வழிகாட்டி. கலை வளர்ச்சிக்குப் பல்துறை அறிவும், இளமையில் ஒவியம் கற்றதும் பெரும் பயனைக் கொடுத்தன.

பல்வகை ஆய்வறிஞர்:

தமிழக வரலாற்றைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தவர். துளு மொழியையும் தமிழையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தவர். இவரது சொல்லாய்வுக் கட்டுரைக்கு, ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பே சான்றாகும்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்:

இவரின் ஆய்வுகள், அறிஞர்களுக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவை வழங்கியது. இவரின் ஆய்வுகள் அடிமரமாக அமைந்து பல புதிய ஆய்வுகள் கிளைவிடக் காரணமாக இருந்தன. இவரது எழுத்தாளுமையில் இவரது புத்தகத்தின் எந்த ஒரு பகுதியையும் ஒதுக்க இயலாது.

பட்டங்களும் பாராட்டுகளும்:

1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம், பாராட்டிக் ‘கேடயம்’ வழங்கியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருது வழங்கியது. தமிழக வரலாற்றுக் கழகத்திலும், தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். அரிய ஆய்வு முடிவுகளை உலகிற்குத் தந்தமையால், அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து, “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர்.

 

2. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

முன்னுரை:

கடிதங்களை இலக்கியமாக்கும் எழுத்தாளர்கள், மொழிக்கு அதன் வழியாகத் தனி அழகை உருவாக்கித் தருகிறார்கள். அந்த வகையில் தம்பி நெல்லையப்பருக்கு, பாரதியார் எழுதிய கடிதம்மூலம் நாம் அறியும் மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றைக் காணலாம்.

மொழிப்பற்று:

“தம்பி நெல்லையப்பரே! உனது உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி, உனக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகின்றேன்.

நெஞ்சம் இளகி, விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி, அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே, நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும்.

உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு மொழிகள் தெரிந்திருந்து, அந்த மொழிப் பத்திரிகைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடையாகத் தெரிந்துகொண்டால், தமிழ்நாட்டிற்கு நன்மை உண்டாகும்.

தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்ள வேண்டும். புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்” என்று கூறுகின்றார். இதில் மொழிப்பற்று மிளிர்வதைக் காணலாம்.

சமூகப்பற்று:

“தம்பி, தமிழ்நாடு வாழ்க என்றெழுது. தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது. தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது. அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது.

ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்று எழுது. அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது. பெண்ணைத் தாழ்மை செய்தோன், கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது. தொழில்கள் இந்நாட்டில் அதிகம் பெருகுதல் வேண்டும் என்று கூவு. வியாபாரம் வளர்க; யந்திரங்கள் பெருகுக; முயற்சிகள் ஓங்குக என்றெழுது.

இசை, சிற்பம், யந்திரநூல், பூமிநூல், வானநூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு. இவை எல்லாவற்றையும் அடையச் சக்தி வேண்டும். அதற்குச் சக்தி, சக்தி, சக்தி என்று பாடு” என எழுதித் தமிழ்ச் சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தைப் பிரதிபலிக்கச் செய்துள்ளார்.

முடிவுரை :

பாரதியார், தம்பி சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாக மொழிப்பற்று, சமூகப்பற்று இரண்டும் ஒன்றிற்கொன்று போட்டியிட்டு மிளிர்வதைக் காணமுடிகின்றது. ஆதலால், நாமும் மொழிப்பற்றும் சமூகப்பற்றும் உடையவர்களாகத் திகழ்ந்து நாட்டையும் மொழியையும் உயர்த்த வேண்டும் என்பதில் உறுதி கொள்வோமாக!

 

3. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி. பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை:

தமிழ்மொழி நம் அடையாளம்; பண்பாட்டின் நீட்சி; உலகம் தோன்றிய காலந்தொட்டு, மக்களால் பேசப்பட்டு, எழுதப்பட்டு உயிர்ப்போடும் இளமையோடும் இருப்பது. இன்றும் தமிழ்மொழியின் புகழ் எத்திசையும் இலங்குகிறது. இத்தகைய தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைக் காணலாம்.

மாலைநேரக் கதிரவன்:

சிவந்த நிறமுடைய கதிரவன் தலைசாய்ப்பதுபோல் மலையின் பின்னே மாலைநேரத்தில் மறைவான். அப்போது வானம் சிவந்த பூக்காடுபோலக் காட்சியளிக்கும். அந்தச் சிவந்த நிறத்தைப்போலத் தம் கைகள் சிவக்க உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வைத் துளிகள் அவர்களின் பருத்த தோள்கள்மீது முத்துமுத்தாய் இருக்கும். இவற்றையெல்லாம் வியந்து பாட, எனதருமைச் செந்தமிழே உன்னையன்றி ஏற்ற துணை வேறுண்டோ!

குளிர்பொதிகைத் தென்தமிழே!:

தமிழ்க்குயிலே! பொங்கிவரும் கவிதைவெறிக்கு உணவாய் இருக்கின்றாய். சங்கம் வைத்துத் தமிழ் அறம் வளர்த்த பாண்டியர்களின் அவையில் வீற்றிருக்கின்றாய். பாரி முதலான பல வள்ளல்களைப் பெற்றுத் தந்திருக்கின்றாய்.

தமிழ்க்குயிலே ! அன்று நீ செய்த அந்தப் பழமையான நலத்தை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுவர, என்றன் மெய்சிலிர்க்கக் கூவி வா! குளிர்ந்த பொதிகை மலையில் தோன்றிய தென்தமிழே, சீறி வருவாயாக! புதுப்பொலிவுடன் விளங்கும் தமிழே தவழ்ந்து வருவாயாக! எனக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.

முடிவுரை:

காலத்திற்கேற்பத் தன்னைப் புதுபித்துக்கொண்டு இன்றளவும் சிறப்புற்றுத் திகழ்கின்ற தமிழின் சிறப்பைக் கவிஞர் சிற்பி வியந்து பாடுகின்றார்.

 

4. ‘சொல்லோவியங்கள்’ என்னும் கவிதை நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சிநிரலை உருவாக்கி, நன்றியுரை ஒன்றை எழுதுக.

  • சொல்லோவியங்கள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா
  • இடம் : அரசு மேனிலைப்பள்ளி அரும்பாவூர்
  • நாள் : 09.07.2025 புதன்கிழமை
  • நேரம் : பிற்பகல் 3 மணி

நிகழ்ச்சிநிரல்

  • தமிழ்த்தாய் வாழ்த்து: செல்வி தனலட்சுமி
  • வரவேற்புரை: திரு. ச. நடராசன் (தலைமையாசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, அரும்பாவூர்)
  • நூல் அறிமுக உரை: திரு. க. சுப்பையா அவர்கள் (ஓய்வுபெற்ற தமிழாசிரியர்)
  • நூல் வெளியீடு மற்றும் வாழ்த்துரை : திரு. இரா. இளங்குமரனார் அவர்கள் திருவள்ளுவர் தவச்சாலை, அல்லூர்
  • முதல் பிரதியைப் பெறுபவர்: திரு. அ. அமலதாஸ் அவர்கள் (பேரூராட்சித் தலைவர், அரும்பாவூர்)
  • நூலாசிரியர் உரை: திரு. அ. குமார் ஐயா அவர்கள் (எழுத்தாளர், தமிழாசிரியர், பணிநிறைவு)
  • தலைமை உரை : திரு. இல. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் (தலைமையாசிரியர், ஒய்வு)
  • விழிப்புணர்வுப் பாடல்கள்: மாணவியர்
    நன்றியுரை: திருமதி. த. வாசுகி (கணித ஆசிரியை)
    நாட்டுப்பண்: மாணவ மாணவிகள்
  • நன்றியுரை

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்!

இன்று நம் பள்ளியில் நடைபெறும் இவ்விழா, மிக முக்கியமான விழாவாகும். ஒரு பேனா தலைகுனியும் போது, ஒரு சமூகம் தலை நிமிரும் என்பார்கள். இன்று சொல்லோவியங்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமையேற்று, இனிய தலைமையுரை தந்து எழுத்துகளின் வலிமையை இச்சமூகம் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்திய தேசிய விருது பெற்ற எழுத்தாளர், பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் திரு. இல. கிருஷ்ணமூர்த்தி ஐயாவிற்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் மனமகிழ்வுடன் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கிய திருவள்ளுவர் தவச்சாலையின் நிறுவனர் இளங்குமரனார் அவர்கள், மாணவர்கள் நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அந்தப் பெருந்தகைக்கும் நன்றி.

இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட பேரூராட்சித் தலைவர் திரு. அ. அமலதாஸ் அவர்கள் நல்ல மனம் கொண்ட கொடையாளர். அவருக்கும் நம் நன்றிகளைத் தெரிவிப்போம்.

சொல்லோவியங்கள் கவிதை நூலில் உள்ள கருத்துகளை எளிமையாகவும் இனிமையாகவும் எடுத்துரைத்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு. க. சுப்பையா அவர்கள் மிக அற்புதமாக நூலை அறிமுகம் செய்தார். அவருக்கும் நம் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம். மிக அற்புதமாக நூலை உருவாக்கி நம் கரங்களில் இன்று தவழவிட்ட எழுத்தாளரும், நம் பள்ளியின் மூத்த தமிழ் ஆசிரியருமான திரு. அ. குமார் ஐயா அவர்களுக்கும் நம் நன்றியினைக் கரவொலியோடு தெரிவிப்போம்.

மிக அருமையாக இந்த விழாவினை நெறிப்படுத்திய நம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. ச. நடராசன் அவர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவிக்கிறேன். வரவேற்புரை வழங்கிய திரு. ம. செல்லபாண்டியன், நடனமாடிய மாணவ மாணவிகள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த இருபால் ஆசிரிய தீபங்கள் மாணவ மாணவிகள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன். நன்றி! வணக்கம்!

 

12th Tamil Unit 1 Book Back Question & Answer 2025

மொழியை ஆள்வோம்

இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.

தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள்

எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய்மொழியே துணைநிற்கும் – இதனை வலியுறுத்திப் பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

தாய்மொழிக் கல்வியின் தேவை – தாய்மொழிச் சிந்தனை – அறிஞர்களின் பார்வை கற்கும் திறன் – பயன் இன்றைய நிலை.

முன்னுரை:

நம் மனத்தில் தோன்றும் எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய்மொழியே துணை நிற்கும். எனவே, தாய்மொழிவழிக் கல்வி கற்பதே அறிவு வளத்தைப் பெருக்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளவும் துணைபுரியும் என்பதை இங்குக் காண்போம்.

தாய்மொழிக் கல்வியின் தேவை:

மனிதனின் சிந்தனையும், கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. தாய்மொழிக் கல்வியே ஒவ்வொருவருக்கும் அவசியமானது. தாய்மொழி வழிக்கல்வி எளிமையானது; இனிமையானது. மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே சிறந்தது.

தாய்மொழிச் சிந்தனை:

எத்தனை மொழிகள் கற்றாலும் ஒருவனின் சிந்தனை ஊற்றெடுப்பது தாய்மொழியில்தான். மனிதர்களின் மனவெழுச்சி, வாழ்விற்கு அடிப்படை. அத்தகைய மனவளர்ச்சியைத் தாய்மொழியால் மட்டுமே பெற முடியும்.

அறிஞர்களின் பார்வை:

“தாய்மொழியில் அறிவியல் கல்வியைக் கொடுப்பதன்மூலம் ஆக்கப்பூர்வ சிந்தனையைக் குழந்தைகள் மத்தியில் கொண்டுவர முடியுமென்று” கூறினார் அப்துல்கலாம். “ஒருவனது இதயத்தைத் தொடுவதற்கு அவனது தாய்மொழியில் பேசவேண்டும் என்றும், பொதுமொழியில் பேசினால் அவனது எண்ணத்தை மட்டுமே அறியமுடியும்” என்றும் கூறினார் நெல்சன் மண்டேலா. “பள்ளிகளில் பயிற்று மொழியாகத் தாய்மொழிதான் இருக்க வேண்டும்” என்றார் மகாத்மா காந்தியடிகள்.

கற்கும் திறன்:

தாய்மொழி வாயிலாகக் கற்கும் திறன் மாணவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். தாய்மொழி மூலமாகவே தான் கூற விரும்பும் கருத்தைத் தெளிவாகவும் முழுமையாகவும் ஆழமாகவும் ஒருவரால் தெரிவிக்க முடியும். கற்கும் திறன் அதிகரிப்பது தாய்மொழி வழியாகத்தான். தாய்மொழி வழியாகக் கற்கும்போது சிந்தனைத் திறன் அதிகமாகும்.

தாய்மொழி வழிக் கல்வியின் பயன்:

கருவிலேயே தாய் பேசும் மொழியோடு குழந்தைக்கு அறிமுகம் ஏற்படுவதால், தாய்மொழி வழிக் கற்றல் என்பது குழந்தைக்கு எளிதாகிறது. தாய்மொழியில் கற்கும் குழந்தைகள் சிறந்த அறிஞர்களாக, மேதைகளாக வளருவார்கள். தரமான கல்வியும் பெறுவார்கள்.

இன்றைய நிலை:

தாய்மொழி வழிக் கல்வி கற்போரை இன்று கேவலமாக நினைக்கின்றனர். தாய்மொழிக் கல்வி பயில்வோரைத் தரக்குறைவாக எண்ணுவது, இன்றைய சமுதாயத்தின் அவலங்களில் ஒன்றாக உள்ளது. இது தவறான எண்ணம்.

முடிவுரை:

மொழி என்பது ஒரு தகவல் தொடர்புச் சாதனம் மட்டுமன்று; ஒரு பண்பாட்டின் – ஓர் இனத்தின் அடையாளம் என்பதை உணர்ந்தாலே தாய்மொழியையும் தாய்மொழிவழிக் கற்றலையும் அழிவிலிருந்து காக்கலாம்.

 

தமிழாக்கம் தருக.

1. Learning is a treasure that will follow its owner everywhere.
கற்றல் என்பது ஒரு செல்வக்குவியல் போன்றது; அது தன் உடைமைதாரரைத் தொடரும்.

2. A new language is new life.
புதிய மொழியை அறிவது, புதிய வாழ்க்கையாக அமையும்.

3. If you want people to understand you, speak their language.
மக்கள் உன்னைப் புரிந்துகொள்ள விரும்பினால், அவர்கள் மொழியில் பேச வேண்டும்.

4. Knowledge of languages is the doorway to wisdom.
பன்மொழி அறிவு என்பது, மதிநுட்பத்திற்கு வாயிலாகும்.

5. The limits of my language are the limits of my world.
என் மொழியின் எல்லை என்பது, என் உலகின் எல்லையாகும்.

 

இலக்கிய நயம் பாராட்டுக.

முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக்கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!

– கண்ணதாசன்

ஆசிரியர் குறிப்பு:

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் புகழ் பெற்ற ‘கவியரசு’ கண்ணதாசன், நாலாயிரம் கவிதைகள், ஐயாயிரம் திரைப்படப் பாடல்கள், கதைகள், கட்டுரைகள் எழுதியவர். “முச்சங்கம் கூட்டி…” எனத் தொடங்கும், அவர் எழுதிய பாடலின் நயத்தை இங்கு ஆராய்வோம்.

மையக்கருத்து:

கருத்துச் செரிந்த இலக்கியங்களை நாளும் படைத்துப் புதுப்பொலிவுடன் தமிழ்ப் பெருமகள், அன்னையாகத் திகழ்கிறாள்.

எதுகை:

அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து அளவு (மாத்திரை) ஒத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
அடிஎதுகை: முச்சங்க, அச்சங்கம், சொற்சங்க, அற்புதங்க

மோனை:

அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி வருவது மோனை.
சீர்மோனை: முச்சங்க, முதுபுலவர், அற்புதங்கள், அமைத்த, அச்சங்க, அளப்பரிய

இயைபு:

அடிதோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபு.
அடி இயைபு: தமைக்கூட்டி, பொருள்கூட்டி, கவிகூட்டி

அணி:

செய்யுளுக்குச் சொல்லாலோ, பொருளாலோ மேலும் அழகு சேர்ப்பது அணி. இப்பாடலில் ‘கூட்டி’ என்னும் சொல், ஒரே பொருளில் பலமுறை பயின்று வந்துள்ளதால், சொற்பொருள் பின்வருநிலையணி இடம் பெற்றுள்ளது எனலாம்.

சுவை:

பாடலின் உட்கருத்தை நம் மனக் கண்முன்னே காட்சிப்படுத்துவது சுவையாகும். தமிழன்னையின் பெருமையைப் புகழ்ந்து பாடுவதால், இப்பாடலில் ‘பெருமிதச் சுவை’ பயின்று வந்துள்ளது.

கண்ணதாசனின் “முச்சங்கம் கூட்டி…” எனத் தொடங்கும் பாடல் எதுகை, மோனை, இயைபு, அணி எனப் பல சுவை நயங்களைத் தன்னகத்தே கொண்டு, படிப்போரைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது எனலாம்.

 

கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

மொழி என்பது, மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே, மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை, தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது, மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது, பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே, பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே.

– மொழி வரலாறு (மு. வரதராசனார்)

வினாக்கள்:

1. மொழி என்பது யாது? அது எத்தகையது?
2. பெற்ற தாயின் முதல் வேட்கை எது? பெரிய மகிழ்ச்சி எது ?
3. மொழி வளர்ச்சி என்பது, எதனோடு தொடர்புடையது?
4. மொழி எவ்வாறு வளர்ச்சி பெறும்?
5. மொழியை வளர்ப்பவர் யார்? எவ்வெவ்வாறு?

 

உவமைத்தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.

1. தாமரை இலை நீர்போல:
துறவிகள், தாமரை இலை நீர்போல, உலகப் பற்று இல்லாமல் வாழ்வார்கள்.

2. கிணற்றுத் தவளைபோல:
இன்றும் சில பெண்கள் உரிய கல்வியைப் பெறாததால் கிணற்றுத்தவளைபோல, வெளியுலகம் அறியாது வாழ்கின்றனர்.

3. எலியும் பூனையும்போல:
அமெரிக்காவும் சீனாவும் எலியும் பூனையும்போல கொள்கைகளால் முரண்பட்ட நாடுகளாக இருக்கின்றன.

4. அச்சாணி இல்லாத தேர்போல:
குறிக்கோளை முடிவு செய்யாததால் சிலர், அச்சாணி இல்லாத தேர்போல வாழ்வில் தள்ளாடுகின்றனர்.

5. உள்ளங்கை நெல்லிக்கனிபோல:
நம்பகத்தன்மை இல்லாத நாடு இலங்கை என்பது, நமக்கு இப்போது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்கி இருக்கிறது.

 

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.

ஆதி மனிதன், நாடோடியாக வாழ்ந்தான். இரவு நேரங்களிலும், இயற்கைச் சீற்றங்களிலும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக் குகைகளில் தங்கினான். கூர்மையான கற்களை வேட்டையாடுவ தற்கான கருவிகளாக அவன் பயன்படுத்தினான். வேட்டையாடி உணவுண்டபின் ஓய்வு நேரத்தில் தன் வாழ்வியல் அனுபவங்களைத் தான் தங்கி வாழ்ந்த பாறைக் குகைகளில் சிற்பங்களாகச் செதுக்கி வைத்தான். அவை பெரும்பாலும் அவன் கண்ட, வேட்டையாடிய விலங்குகளைக் குறிப்பனவாக அமைந்திருக்கக் காணலாம்.

அந்தாதித் தொடரால் கவித்துவமாக்குக.

குழந்தையைக் கொஞ்சும் தாயின் குரல்
தாயின் குரலில் உயிரின் ஒலி

உயிரின் ஒலி தரும் ஆனந்த வெள்ளம்
ஆனந்த வெள்ளம் வந்து பாயுமே உலகெங்கும்!

 

குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்..

(தமிழ்ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன், மறைமலை அடிகள்)

எ-கா : கவிஞர் : ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம்.
விடைகுறிப்பு : கவிமணி

1. தமிழறிஞர்: முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.
விடைகுறிப்பு:
மறைமலை அடிகள்

2. தாய்மொழி ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தருவன.
விடைகுறிப்பு:
தமிழ்ஒளி

3. சிறுகதை ஆசிரியர்: முதல்பாதி நவீனம்.
விடைகுறிப்பு:
புதுமைப்பித்தன்

4. முன்னெழுத்து அரசன்; பின்னெழுத்து தமிழ் மாதம்.
விடைகுறிப்பு:
கோதை

 

கதையைத் தொடர்ந்து நிறைவு செய்க.

வேப்பமரத்தாலான மரப்பாச்சிப் பொம்மை ஒன்று என் வீட்டில் நெடுங்காலமாக இருந்தது. மிகுந்த அன்போடு அதற்கு என் பெயரை வைத்திருந்தேன். எத்தனையோ வாசனைகளை அதன்மீது பூசினேன். ஆனாலும், அந்தக் கசப்பின் வாசம் போகவில்லை. இரவில் அதன் மெல்லிய விம்மல் ஒசை கேட்கும்……….

ஏன் அழுகிறது பொம்மை என நான் அதைக் கையில் எடுத்துத் தடவிக் கொடுத்து, அதன் சின்ன கன்னங்களில் முத்தமிட்டு… ‘அழாதே’ எனச் சொல்லிவிட்டுப் படுத்தேன். தூங்கியபின் கனவில் வந்த மரப்பாச்சிப் பொம்மையிடம் கேட்டேன், “ஏன் அழுகிறாய்?” என்று.

“நீ உன் அப்பா அம்மாவுடன் வாழ்கிறாய். அவர்கள் உன்னைக் கொஞ்சுகிறார்கள், அன்பைப் பொழிகிறார்கள். எனக்கோ அப்பா அம்மா யார் என்றே தெரியாது. எனவே, என் அப்பா அம்மாவை நினைத்து அழுகிறேன்” என்றது பொம்மை. “இரு, நான் உன்னை உன் அப்பா அம்மாவிடம் அழைத்துச் செல்கின்றேன்” என்று எழுந்தேன்; விழித்துக் கொண்டேன். இன்னும் விம்மல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

அழுவது யார் என எண்ணிப் பொம்மையிடம் சென்றேன். பொம்மையிடமிருந்து சத்தம் இல்லை. அருகிலிருந்த ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன். என் வயது ஒத்த ஒரு சிறுவன் குளிரில் நடுங்கியபடி அழுது கொண்டிருந்தான். பாவமாக இருந்தது. ‘தம்பி… ஏன் அழுகிறாய் என்றேன்’. ‘பசிக்குது’ என்றான். ஓடிச் சென்று சமையலறையில் என்ன இருக்கிறது எனப் பார்த்தேன். வீட்டில் அனைவரும் உண்டதுபோக இரண்டு இட்லி மீதம் வைத்திருந்தாள் அம்மா. அதில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவி, அவனிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் படுத்தேன். விம்மல் ஒலி இல்லை.

 

நிற்க அதற்குத் தக.

குறிப்பேடுகள் உருவாக்குதல், சேகரிப்பு, ஏதேனும் கலை பயிலல்.

படிப்போம், பயன்படுத்துவோம்!

  • Anthropology – மானுடவியல்
  • Archaelogy – தொல்லியல்
  • Research – ஆராய்ச்சி
  • Fine Arts – கவின்கலைகள்
  • Field Study – கள ஆய்வு
  • Epigraphy – கல்வெட்டியல்

அறிவை விரிவு செய்.

பாரதியின் கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்
பாரதி கட்டுரைகள்
இலக்கண உலகில் புதிய பார்வை – டாக்டர் பொற்கோ
பாரதி கதைகள்
சுவரொட்டிகள் – ந.முத்துசாமி
தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி
நெல்லூர் அரிசி – அகிலன்
மறைந்துபோன தமிழ் நூல்கள் – மயிலை சீனி. வேங்கடசாமி

12th Tamil Unit 1 Book Back Question & Answer 2025. thanks for watching share your friends.

 

Leave a Reply