You are currently viewing 12th Tamil Unit 3 Book Back Answer

12th Tamil Unit 3 Book Back Answer

12th Tamil Unit 3 Book Back Answer 2025

TN 12th Standard Unit 3 Book Back Question and Answer New Syllabus Download pdf

Tamil Nadu Start Board Syllabus 12th Standard Tamil Unit 3 Book Back Question and Answer New Syllabus 2025. 12th Standard Tamil  Unit 3 சுற்றத்தார் கண்ணணே உள Book Back Answers and Solutions. 12th Tamil New Text Books. Class 12 Tamil இயல் 3 – சுற்றத்தார் கண்ணணே உள – தமிழர் குடும்ப முறை, விருந்தினர் இல்லம், கம்பராமாயணம்*, உரிமைத் தாகம், பொருள் மயக்கம் book back answers and solutions. 12th Tamil All Unit book back question & answer guide

Class 12 Tamil Lesson 3 – 1 Mark Questions Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following, 2 Mark Questions Answer briefly, 3, 4, and 5 Mark Questions: Answer in detail.

திறன் அறிவோம்

பலவுள் தெரிக.

1. ‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல் _________.

அ) தொல்காப்பியம்
ஆ) திருக்குறள்
இ) குறுந்தொகை
ஈ) புறநானூறு

விடைகுறிப்பு : ஆ ) திருக்குறள்

2. பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்க.

சொல்              பொருள்
அ) செற்றார் – 1. மகிழ்ச்சி
ஆ) கிளை – 2. காடு
இ)உவகை – 3. பகைவர்
ஈ) கானம் – 4. உறவினர்

அ) 2, 4, 3, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 4, 1, 3
ஈ) 3, 2, 4, 1

விடை: ஆ) 3, 4, 1, 2

 

3. “இவற்றை வாயிலுக்கே சென்று, இன்முகத்துடன் வரவேற்பாயாக” என்று, ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது

அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

4. தந்தனன் தாதை தன்னைத் தடக்கையான் எடுத்துச் சார்வான்” – அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு

அ) உரிச்சொல் தொடர்
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ) இடைச்சொல் தொடர்

விடை: அ) உரிச்சொல் தொடர்

5. “எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

அ) தனிக்குடும்ப முறை
ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூகமுறை
ஈ) தந்தைவழிச் சமூகமுறை

விடை: ஈ) தந்தைவழிச் சமூகமுறை

12th Tamil Unit 3 Book Back Answer – குறு வினா

1. புக்கில், தன்மனை – சிறுகுறிப்பு எழுதுக.

  • சங்க காலத்தில் தற்காலிகத் தங்குமிடம் ‘புக்கில்’ எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம், ‘தன்மனை’ எனவும் வழங்கப் பட்டுள்ளன.

2. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.

  • சுக்ரீவனிடம் இராமன், “நான் இனிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் என் பகைவராவர்! தீயோராக இருப்பினும் உன் நண்பர் எனக்கும் நண்பராவர்! உன் உறவினர், என் உறவினராவர்!
  • அன்பு நிறைந்த என் சுற்றத்தார், இனி உனக்கும் சுற்றத்தவராவர்! நீ, என் இனிய உயிர் நண்பனாவாய்” என்று கூறி உறவை உறுதிப்படுத்தினான்.

 

3. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

  • மனித வாழ்க்கை ஒரு விருந்தினர் இல்லம் போன்றது.
  • மனிதனுக்கு ஏற்படும் ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு போன்றவற்றை வீட்டிற்கு எதிர்பாராமல் அவ்வப்போது வந்து செல்லும் விருந்தாளிகள் என்று, ஜலாலுத்தீன் ரூமி உருவகப் படுத்துகிறார்.

 

4. “துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது” என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு

பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?

அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஆ) சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்ற பழமொழிக்குப் பொருந்தும்.

 

5. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

  • சங்ககாலத்தில் கணசமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். பெண் திருமணம் செய்த பின்னரும், தன் இல்லத்திலேயே தாயமுறைப்படி தொடர்ந்து வாழ்ந்துள்ளாள்.
  • குடும்பத்தின் சொத்தும் வளங்களும் தாய்வழிச் செல்வங்களும் பெண்களுக்கே சென்று சேர்ந்தன.

 

சிறு வினா

1. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் – விளக்கம் எழுதுக.

  • தனிக்குடும்ப அமைப்பில் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழ்வது விரிந்த குடும்ப அமைப்பு முறையாகும். இந்த விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே கூட்டுக் குடும்பமாக, இன்றைய சமூகத்தில் மாற்றம் பெற்றுள்ளது.
  • பண்டைய விரிந்த குடும்பம் என்பதன் தொடர்ச்சியாக, விளங்கும் இன்றைய கூட்டுக் குடும்பம் என்பது பெற்றோர், அவர்களது மணமாகாத பிள்ளைகள், மணம் முடித்த பிள்ளைகள், அவர்களின் துணைவர், அவர்களின் பிள்ளைகள் இணைந்து வாழ்வதாக உள்ளது.
  • சில நேரங்களில் கூட்டுக் குடும்பங்களில் பெற்றோரின் உடன்பிறந்தவர்கள், பெற்றோர்களின் தாய், தந்தை, இரத்த உறவால் பிணைக்கப்பட்ட நேர்வழி, கிளைவழி உறவினர்கள் என அனைவரும், ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக்குடும்பமாக விளங்குகிறது.

 

2. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.

  • குகனது அளவற்ற அன்பை உணர்ந்த இராமன், “உன்னை என் தம்பியாக ஏற்றுக்கொண்டேன். நால்வர் உடன்பிறந்தவராக இருந்த நாம் இனி, ஓர் ஐவர்கள் உளரானோம்” என்றான்.
  • இலங்கையில் இராவணனுடன் போர் புரிந்து திரும்பிய சுக்ரீவனைப் பார்த்து, “இனி நீ வேறு; நான் வேறு அல்ல” என்று இராமன் கூறினான். “உன் பகைவர், என் பகைவர். தீயவராயினும் உன் நண்பர் என் நண்பர். “நீ என் உயிர் நண்பன்” என்று கூறி, அவனைச் சகோதரனாக ஏற்றுக் கொண்டான்.
  • சீதையைக் கவர்ந்து வந்த செயல் தவறு என்று கூறியதற்காக இராவணன் உடன்பிறந்த வீடணனைக் கடிந்து கொண்டான். அதனால், வீடணன் இலங்கையை விட்டு வெளியேறி இராமனிடம் அடைக்கலம் வேண்டினான்.
  • அடைக்கலம் கொடுத்த இராமன் அவனுக்கு இலங்கை அரசை ஆளும் உரிமையைக் கொடுத்து, அவனையும் தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டு, “நின்னொடும் எழுவர் ஆனோம்” என்றான்.

 

3. “வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்:

பாரசீகக் கவிஞர் ஜலாலுத்தீன் ரூமி எழுதிய ‘விருந்தினர் இல்லம்’ கவிதையில் இடம்பெற்ற வரி இது.

பொருள் :

உன் விருந்தினர் இல்லத்திற்கு வருபவர் எவராக இருந்தாலும், அவருக்கு நன்றி செலுத்து.

விளக்கம் :

மனித இருப்பு ஒரு விருந்தினர் இல்லம். ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு. அதில், எதிர்பாராத விருந்தாளிகளாக வந்து செல்லும் ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு ஆகியவற்றை வரவேற்று விருந்தோம்பு! புதியதோர் மகிழ்ச்சிக்காக அவை உன்னைத் தூசிதட்டித் தயார்படுத்தலாம். வக்கிரம், அவமானம், வஞ்சனை ஆகியவற்றை வாயிலுக்கே சென்று வரவேற்பாயாக! ஏனெனில், ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டியாக அனுப்பப்படுவதால், வருபவர் எவராயினும் நன்றி செலுத்து என்கிறார் ரூமி.

 

4. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?

1. என் பெற்றோருக்கு உதவியாகப் பல வேலைகள் செய்வேன்.
2. என்னுடைய உடைகளை நானே துவைத்துக் கொள்வேன்.
3. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வேன்.
4. என்னுடைய தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்வேன்.
5. வீட்டிற்குத் தேவையான பொருட்களை அருகிலுள்ள கடைக்குச் சென்று வாங்கி வருவேன்.

 

5. மணந்தகம் விளக்குக.

  • தலைவனும் தலைவியும் மணம் புரிந்து சேர்ந்த இல்லற வாழ்வில் ஈடுபடக் கூடிய தொடக்க கட்டமே ‘மணந்தகம்’ எனப்பட்டது.
  • முதல் குழந்தை பிறக்கும்வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. இது, தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக அமைகிறது.
  • இளந்தம்பதியினருக்குத் தக்க அறிவுரைகள் கூறி நன்னெறிப்படுத்தும் பணி செவி லித்தாயர்க்கு உரியது எனத் தொல்காப்பியம் விளக்குகிறது. இதன்மூலம், ‘மணந்தகம்’ என்னும் குடும்ப அமைப்பு முதன்மை பெற்றிருந்ததை அறிய முடிகிறது எனலாம்.

 

12th Tamil Unit 3 Book Back Answer

நெடு வினா

1. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.

முன்னுரை:

குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது. குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. மனிதனைச் சமூக வயப்படுத்தும் பணியைக் குடும்ப அமைப்பே சிறப்பாகக் கட்டமைக்கிறது.

குடும்பம்:

*குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே. நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போலக் குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன. சங்க இலக்கியத்தில் குடும்பை, குடும்பு ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை. ‘குடும்பு’ என்னும் சொல் ‘கூடிவாழுதல்’ என்று பொருள்படுகிறது. குடும்பு எனும் சொல்லுடன் ‘அம்’ விகுதி சேர்ந்து, குடும்பம் எனும் சொல் உருவானது.

மணந்தகம்:

குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது; பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியால், பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது.

தாய்வழிக் குடும்பம்:

சங்ககாலத்தில் பெண் திருமணம் முடித்த பின்னரும் தன் தாய் வீட்டிலேயே வாழும் முறை இருந்துள்ளது. மனைவியின் இல்லத்தில் கணவன் வாழ்ந்தான். தாய்வழிக் குடும்ப முறையில் வளங்களும் செல்வங்களும் சொத்தும் பெண்களுக்கே போய்ச் சேர்ந்தன.

தந்தைவழிக் குடும்பம்:

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தை வீட்டில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது, தலைவனுடைய தாய் தலைவிக்குச் ‘சிலம்புகழி நோன்பு’ செய்தாள். இதன்வழி சங்ககாலத்தில் தந்தைவழிக் குடும்பமுறை வலுவாக இருந்தமை தெளிவு.

தனிக்குடும்பம்:

தாய், தந்தை, குழந்தை மூவருள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது. தனிக்குடும்ப வகை, சமூகப் படிமலர்ச்சியால் இறுதியாக ஏற்பட்ட ஒன்று, இன்றைய தொழிற் சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. பல ஆதிக்குடிகளிடமும் தனிக்குடும்பமுறை, முக்கியமான குடும்பமுறையாக இருந்தது.

விரிந்த குடும்பம்:

கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்பமுறை இருந்துள்ளது. இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமைகள் நிறைந்த மக்களுடன் நிறைவாக வாழ்ந்தனர். அறத்தினை விரும்பிய சுற்றத்துடன் சேர்ந்து வாழ்ந்தனர். தலைவனும் தலைவியும் மகிழ்வுடன் மனையகம் காத்தலே, இல்வாழ்வின் பயனாகும் எனச் சங்ககால மக்கள் எண்ணினர்.

முடிவுரை:

சங்கச் சமூகம், குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டிருந்த நிலையைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய சமூக அமைப்பும் கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகுகளைக் கொண்டதாகவும், தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. இந்தக் குடும்ப அமைப்பு முறை, தொன்மை மிக்கத் தமிழ் மனித சமூகத்தின் பரந்த அடையாளக் கட்டமைப்பாகும்.

 

2. பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.

முன்னுரை:

குகன் வேடுவன், சடாயு பறவை, சவரி எளிய முதியவள், சுக்ரீவன் வானரம், வீடணன் எதிரியின் தம்பி என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் தன் குடும்பமாகக் காணும் பண்பின் படிமமாக இராமன் திகழ்ந்தான். இது குறித்து இனி ஆராய்வோம்.

குகன் உயிர்:

பேரரசன் தயரதன் மகனாக இருந்தாலும், வேடுவர் தலைவனான குகனைத் தன் உடன்பிறந்தானாக ஏற்றுக்கொள்கிறான் இராமன். பாறை போன்ற உடலுக்குள் பஞ்சு உள்ளம் கொண்ட குகனை நோக்கி, “நீ என் உயிர் போன்றவன்; தம்பி இலக்குவன், உன் தம்பி; சீதை, உனக்கு அண்ணி. குளிர்கடலும் இந்நிலமும் எல்லாம் உனதே ஆகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்ப பணிபுரிபவன்” என்று கூறி, அணைத்துக் கொண்ட இராமன் பின்னர், “குகனோடும் ஐவர் ஆனோம்” என்று உடன்பிறந்தானாக ஏற்றான்.

சடாயு காதை:

கழுகு வேந்தன் சடாயு, சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது தடுத்துப் போர் புரிந்து காயப்படுகிறான். நடந்தவற்றை இராமனிடம் கூறியபின் சடாயு உயிர் துறக்கிறான். தயரதனின் நண்பனாகிய சடாயுவிற்கு இறுதிச் சடங்குகளை இராமன் செய்கிறான். சந்தனக் கட்டைகளையும், அகில் கட்டைகளையும் எடுத்துவந்து வைக்கிறான். தருப்பைப் புற்களை ஒழுங்குபட அடுக்கிப் பூக்களைத் தூவி மணலினால் தகன மேடை அமைத்தான். நன்னீர் கொண்டு வந்தான். தன் பெரிய கைகளால் சடாயுவை, சுமந்து வந்து, ஈமக் கடன்களைச் செய்தான்.

சவரியின் அன்பு:

இவனுக்குமுன் இப்படியொருவர் இருந்தாரெனப் பிறிதொருவரைக் காட்ட இயலாத முதற்பொருளாகிய இராமன், சவரியிடம் இனிதாகப் பேசினான். தன்னையே நினைத்துத் தவம் இருந்த சவரியிடம், “இவ்வளவு காலம் நீ துன்பம் ஏதுமின்றி நலமுடன் இருந்தாய் அல்லவா?” என்று, பரிவுடன் கேட்டான். தன் தவம் பலித்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்திய சவரி, அன்புடன் அளித்த விருந்தை இராமன் ஏற்றான்.

சுக்ரீவனுடன் உறவு:

அனுமன் அழைத்து வந்த வானரத் தலைவனான சுக்ரீவனிடம் இராமன், “இனி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் என் பகைவர்; தீயவராயினும் உன் நண்பர்கள் என் நண்பர்கள்; உன் உறவினர் என் உறவினர்; அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர்; நீ என் இனிய உயிர் நண்பன்” என்று கூறி உறவு பாராட்டினான்.

வீடணனிடம் உறவு:

உடன்பிறந்த இராவணன் கடிந்ததால், தன்னைத் தேடிவந்து அடைக்கலமான அரக்கர்குல வீடணனைத் தன் உடன் பிறந்தவனாக ஏற்ற இராமன் இலங்கை அரசை அவனுக்கு உடைமையாக்கினான். மேலும், “குகனுடன் சேர்ந்து நாங்கள் ஐவர் ஆனோம்; பின்னாளில் கதிரவன் மகனான சுக்ரீவனுடன் சேர்ந்து அறுவர் ஆனோம்; உள்ளத்தில் அன்புடன் வந்த அன்பனே! உன்னோடு சேர்ந்து நாம் எழுவரானோம்” என்று உறவை நிலைநாட்டினான்.

முடிவுரை:

தன்னை ஒத்த மனிதர்களிடம் மட்டுமன்றிப் பறவை, அணில், அரக்கர், விலங்கு, வானரம், வேடுவர் என அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்தி ஆதரவு காட்டும் பண்பின் படிமமாக இராமன் விளங்கியமையை இதன்வழி அறிந்து தெளியலாம்.

 

3. ‘உரிமைத் தாகம்’ கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.

நில உடைமையை உயிராகக் கொண்டிருந்தது தமிழ்ப் பண்பாடு. “எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை! வாழிய, நிலனே!” என்பது நம் பண்பாட்டுச் சித்திரம். இந்த நில உடைமை உரிமையும் உறவும் குறித்துப் பூமணியின் ‘உரிமைத்தாகம்’ உணர்த்தும் செய்திகளைக் காண்போம்.

முத்தையனும் வெள்ளைச்சாமியும் அண்ணன் தம்பிகள். முத்தையனின் மனைவி மூக்கம்மாள் திருமணத்திற்குப்பின் கணவனின் தம்பி வெள்ளைச் சாமியைத் தன் மகனாகவே பேணிப் பாதுகாத்தாள். வெள்ளைச்சாமிக்குக் கலியாணமான பிறகு கூட்டுக் குடும்ப உறவு சிதைந்தது. வீடு குறுக்குச் சுவரால் இரண்டானது. வெள்ளைச்சாமி பெண்டாட்டி பேச்சைக் கேட்டுத் தவறு செய்து பங்கு பாகம் பிரித்துக் கொண்டான். அப்போது வெள்ளைச்சாமி பேசிய சொற்கள் மனத்தைச் சுட்டதால் வெள்ளைச்சாமியை அண்ணன் ஏறிட்டுப் பார்ப்பதில்லை.

காலம் உருண்டது. வெள்ளைச்சாமி தன் நிலத்தை மேலூரு பங்காரு சாமியிடம் வைத்து, இருநூறு ரூபாய் பணம் கடன் வாங்கினான். அதற்காக வட்டி கட்டியபோது, பங்காருசாமி, நெலத்தை அறுதியா எழுதி வாங்கிவிட்டார். இந்தச் செய்தியை மனைவிமூலம் அறிந்த வெள்ளைச்சாமி, பங்காருசாமியை சந்திக்கப் புறப்பட்டான். கடனைப் பைசல் செய்து தம்பி நிலத்தை மீட்க நினைத்த வெள்ளைச்சாமி கையில் இருந்த பணமெல்லாம் விதைப்பில் செலவாகி விட்டதால் திகைத்தான். அவன் மனைவி கா திலிருந்த நகைகளைக் கழற்றி அடமானம் வைத்து மீட்கச் சொன்னாள்.

நிலம் அடகு வைத்த செய்தியை உறுதி செய்துகொள்ள, இதுவரை போகாத தம்பி வீட்டுக்குள் போய், விவரத்தைத் தெரிந்துகொண்டு, “பாடுபடற நிலத்தை எழுதிக் கொடுக்கலாமா? வீட்டிலே பொண்டாட்டிதான் பிழைப்புன்னு நினைக்காதே.

அண்ணன் தம்பி, அக்கா, தங்கை உண்டு என்று புரிந்து நட” எனக் கூறி, விவரங்களைக் கேட்டறிந்தவன், தன் தம்பியை மறுநாள் வயல்களை உழுது விதைக்கப் போகுமாறு தைரியம் சொல்லிவிட்டு, மறுநாளே பங்காரு சாமியைப் பார்க்கப் போனான். பணிவுடன் வந்து நின்றவனைக் கண்ட பங்காருசாமி மிடுக்குடன், “கையேந்தி ரூபா வாங்கினது வெள்ளைச்சாமி, நானூறுக்குக் கிரையம் எழுதிட்டானே” என்றார். “எரநூறுன்னு சொன்னான். வட்டி குடுத்தாச்சின்னா. அசலக் கொடுத்து கணக்கு முடிச்சி நெலத்தை மீட்க வந்துள்ளேன்” என்றான் அண்ணன்.

வெள்ளைச்சாமி நிலத்தைச் சட்டப்படி தனதாக்கிக்கொள்ள முடியாதெனத் திகைத்தவர், பயமுறுத்தி நானூறு ரூபாயை வாங்கிவிட எண்ணினார். முத்தையனின் வார்த்தைக் கடுப்பு ஏற்றியதால் சட்டப்படி செய்வேன் என மிரட்டினார்.

மறுநாள் முத்தையன் தம்பி நிலத்தில் ஏர் பூட்டி விதைக்க ஏற்பாடு செய்தான். பங்காருசாமி வந்தார். புஞ்சை உழவு முடித்து விதைப்பு நடந்தது, “ஏ முத்தையா ரெண்டு பேருக்கும் போங்காலம் வந்துடுச்சி” என மிரட்டிப் பார்த்தார்.

மேலைக்கடைசி வரப்பில் கடுப்புடன் பங்காருசாமி நின்றிருந்தார். வெள்ளைச்சாமி கோபமா மாட்டை விரட்டிச் சாட்டையைச் சுழற்றினான். “முத்தையா, ரெண்டு பேருக்கும் போங்காலம் வந்துடுச்சி! நான் கோர்ட்டுக்குப் போனா பின்னால வலிக்கும்” என்று மிரட்டினார். “யோவ் என்ன சொன்ன? நாங்க ரெண்டு புள்ளைங்க. இப்ப ஆருக்கு வலிக்கப் போகுதுன்னு பாக்கியா?” என்று ஆவேசமாகச் சாட்டையைச் சுழற்றினான். பங்காருசாமி பதறிப்போய், காரியம் கெட்டுப் போச்சு, இனி நின்னா மோசமா யிடும்னு நகர்ந்தார்.

என்னதான் இருந்தாலும், எத்தனை மன வருத்தம் இருந்தாலும் குடும்பம், குடும்ப மானம், குடும்பச் சொத்து என்கிறபோது அனைத்தையும் காக்க ஒன்றுபடுவது மக்கள் இயல்பு என்பதை இக்கதை தெளிவுபடுத்துகிறது. தானாடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பது நெடுநாள் வழக்கல்லவா? உரிமை என்பது எப்போதும், எந்த நிலையிலும் காக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா?

 

மொழியை ஆள்வோம்

இலக்கிய நயம் பாராட்டுக.

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி,
பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்க,
ஊற்றெடுத்த அன்புரையால் உலுங்க வைத்திவ்
உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று,
கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட
தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்.

– நாமக்கல் கவிஞர்.

ஆசிரியர் குறிப்பு:

  • நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை எழுச்சியூட்டும் தேசபக்திப் பாடல்கள் பல பாடி, தேசியத்தையும் காந்தியத்தையும் போற்றினார். “பெற்றெடுத்த தமிழ்த்தாயை…” எனத் தொடங்கும் அவரது பாடலில் அமைந்துள்ள நயங்களை இங்கு ஆராய்வோம்.

மையக்கருத்து:

  • உறக்கத்திலிருந்த தமிழரின் அகக் கண்களைத் திறந்துவிட்ட பாரதியார், உண்மையில் ஓர் ஆசான் ஆவான் என்பது இப்பாடலின் மையக்கருத்தாகும்.

எதுகை:

  • அடிகளிலோ சீர்களிலோ முதலெழுத்து அளவு ஒத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை எனப்படும்.

அடிஎதுகை

  • பெற்றெடுத்த – ஊற்றெடுத்தே,
  • கற்றுணர்ந்தே – தெற்றெனநம்

மோனை:

  • அடிகளிலோ சீர்களிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.

சீர்மோனை

  • கற்றுணர்ந்தே – கம்பனோடு,
  • தெற்றெனநம் – தெய்வக்கவி

அணி:

  • செய்யுளில் அழகு ஊட்டும் சொற்களோ, தொடர்களோ அமைவதனை அணி என்பர். தமிழ்த்தாய், பாரதி ஓர் ஆசான் ஆகிய தொடர்களில் உருவகங்கள் அமைந்துள்ளன. எனவே, இப்பாடலில் ‘உருவக அணி’ அமைந்துள்ளது எனலாம்.

சந்தம்:

  • இசையுடன் பாடத்தக்க ஒசை நயத்தைப் பெற்றுச் சந்த நயத்துடன் இப்பாடல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்து, பாடி மகிழ்வதற்கு ஏற்ற சந்த நயத்தோடு பொருள் நிறைவையும் பெற்றுள்ளது.

சுவை:

  • பாரதி குறித்த பெருமையைப் பாடல் காட்சிப்படுத்துவதனால், ‘பெருமிதச்சுவை’ புலனாகிறது.

நாமக்கல் கவிஞரின் “பெற்றெடுத்த தமிழ்த்தாயை…” எனத் தொடங்கும் பாடலானது எதுகை, மோனை, அணி, சந்தம், சுவை என்னும் பல நயங்களைக் கொண்டதாகவும் படிப்போரைச் சிந்திக்கச் செய்வதாகவும் விளங்குவதைக் கற்போர் அறிவர்.

கவிதையைப் படித்தபின், அக்கவிதை கிளர்த்தும் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வு உரை ஒன்றை எழுதுக.

விழிப்புணர்வு உரை
அனைவருக்கும் வணக்கம்!
எங்கள் ஊரில் எங்களுக்கும் ஓர் ஆறு உண்டு. பொதுஉடைமை கொள்கையைச் சொல்லாமல் சொல்லும் எங்கள் ஊர் ஆறு, வெளிப்படுத்தும் செய்திகளோ ஆயிரம். வெள்ளம் கரைபுரண்டு ஓடாத நேரத்திலே வெற்று மணல் பரப்பாய் விரிந்து கிடக்கும் எங்கள் ஆற்றின் ஓரத்திலும் நடுவிலும் உயர்திணை, அஃறிணை என்னும் வேறுபாடுகளைக் காண்பது அரிதாகும். இருதிணை சார்ந்த உயிரினங்களும் அதற்கு ஒன்றுதான்.

ஓணான்கள் முட்டையிட, கள்ளிகள் பிழைத்திருக்க, எங்கள் வீட்டுப் பிள்ளைகள் விளையாட, பன்றிகளும் மேய்ந்திருக்கும் வெற்று மணலாய்ப் பரந்து விரிந்து கிடக்கும் எங்கள் ஊர் ஆறானது உணர்த்தும் பொதுவுடைமைச் சித்தாந்தம் புதுமையிலும் புதுமை என்றே கூறலாம்.

இடம் விரிந்த வானம் மேகத்தை ஏற்றுக் கொள்ளும். சூரியன், மழைநீரை ஆவியாக்கி ஏற்றுக்கொள்ளும். ஆற்றங்கரை யோரம் வளர்ந்திருக்கும் முள்மரம்கூடக் காகம், குருவிகளுக்கு இடம் கொடுக்கும். எங்கள் ஊரில் ஓடும் ஆறானது உணர்த்தும் சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடைமை, பொதுநலன் போன்றவை, எங்கள் ஊரில் வாழும் அத்தனை மக்களுக்கும் ஏனோ புரிவதில்லை?

ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓடினாலும் ஆறானது எவரையும் எதையும் ஒதுக்குவதில்லை. எங்களை அதன் நீரற்ற மேனிமீது விளையாடி மகிழ அனுமதிக்கிறது. ஆனால், நாங்கள் ஆற்றின் ஓரத்தில் ஒதுங்கி வாழ்கிறோம் என்பதற்காக, எங்கள் ஊரின் நடுவிலே கொடிகட்டி வாழ்கின்றவர்கள், அவர்களின் வாழ்வைப்போல எங்களுக்கும் ஒரு வாழ்வு உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கின்றனர்?

ஒன்றே குலமாக வாழ்ந்திட, எங்கள் ஊர் ஆறு உணர்த்தும் பாடத்தை, இவர்கள் என்று கற்றிட கற்ற வழி ஒழுகிடப் போகிறார்களோ?

வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

1. என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லா பிரச்சினை களையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.

விடைகுறிப்பு:
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதிய தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தைப் போல எதிர்கொண்டு தீர்ப்பார்கள்.

2. மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

விடைகுறிப்பு:
மாணவர்கள், பெற்றோர்களைத் தமது நண்பர்களாகப் பாவித்து நட்பு கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

 

3. ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமை யினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.

விடைகுறிப்பு:

ஆசிரியருக்குக் கீழ்ப்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றைத் தெரிந்துகொண்டு, அறியாமையினை அகற்றிப் பல நல்லனவற்றைக் கற்றுக் கொடுக்கும்.

கீழ்க்காணும் பகுதியைப் படித்து அறிவிப்பு பலகைக்கான செய்தியை உருவாக்குக.

அறிவிப்புப் பலகை

வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா
நாள்: 05.05.2021
இடம்: அன்புநகர், உறையூர், திருச்சிராப்பள்ளி.
வாழ்த்துபவர்கள்: தங்கவேல் – பொன்னம்மாள் இணையர்
வாழ்த்து பெறுபவர்கள் : இணையரின் வழித்தோன்றல்கள் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: செல்வி. கண்மணி (கொள்ளுப் பேத்தி).

 

12th Tamil Unit 3 Book Back Answer

மொழியோடு விளையாடு

அ) பட்டிமன்றம்.

தலைப்பு: தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா?

தலைவர்:

அன்பிற்குரியவர்களே ! இன்று நம்மிடையே இரு அணியினர் மிகச் சிறந்ததொரு சிந்தனைக்குரிய, சிந்திப்பதற்குரிய கருத்தைப் பற்றி விவாதிக்கப் போகிறார்கள். ஒருவனுக்கு, வளர்ச்சி என்பது எவ்வாறு அமையும் என்பது குறித்து இவர்கள் விவாதிக்கப் போகிறார்கள். நம்மில் சிலர் உறவினர்களின் துணையோடு வளர்ந்திருப்போம்; சிலர் நண்பர்களின் உதவியால் வளர்ச்சி பெற்று வாழ்வில் சாதித்து இருப்பார்கள். இனி, இவர்களின் சொல்வழி அரிய கருத்துகளைச் சுவைத்து மகிழ்வோமா? முதலில் செல்லையா பேச வருகிறார். செல்லையா கருத்துகளை எடுத்துரைக்கலாம்.

செல்லையா:

எல்லாருக்கும் வணக்கம். தனிமனித வளர்ச்சிக்கு உதவுபவர்கள் உறவினர்களே என நான் பேசவுள்ளேன். என் அனுபவம் இதுதான். ஏழ்மை நிலையில் வாடிய எங்கள் குடும்பத்தைப் பார்த்து, எங்கள் உறவினர்களில் சிலர் பலவகையிலும் உதவி செய்தனர். என் தந்தைக்கும் தாய்க்கும் வேலை இல்லாதபோது வேலை கொடுத்து உரிய ஊதியத்தையும் அளித்தனர். அதனால் நான் படிக்க முடிந்தது. என் வளர்ச்சி கண்டு என் உறவினர் மகிழ்ந்து பாராட்டியது உண்டு. அதனால் தனிமனித வளர்ச்சிக்கு உறவினர்களே பெரிதும் உதவுகின்றனர் எனக் கூறி என் உரையை முடிக்கிறேன்.

முத்துச்சாமி:

ஐயா, உங்கள் எல்லாருக்கும் வணக்கம். எனக்கு முன் பேசியவர் அவர் அனுபவத்தைச் சொன்னார். நான், என் அனுபவத்தில் பெற்ற கருத்தைக் கூறுகிறேன். எங்கள் ஊரில் அண்மையில் ஒரு விபத்தில் பெற்றோர் இறந்தனர். அவர்களின் இரண்டு பிள்ளைகள் துணை இன்றி நின்றனர். அப்போது உறவு என்று கூறி ஒருவர் முன்வந்து அந்த இருவரையும் அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரும் எனக்குத் தெரிந்து பள்ளியில் நன்றாகப் படித்துக்கொண்டுதான் இருந்தனர். அழைத்துச் சென்ற உறவினர் அவர்களைப் படிக்க அனுப்பாமல், தம் வீட்டு வேலைகளைச் செய்ய வைத்துக் கொண்டனர். அதைத் தட்டிக் கேட்க எவருக்கும் துணிவு இல்லை. இந்த நிலையில் அந்தப் பையன்களின் நண்பன் செய்தியைக் குழந்தைகள் நலத்துறைக்குத் தெரிவித்துக் காப்பாற்றி, காப்பகத்தில் சேர்த்துப் படிக்க வழிசெய்தான். இங்கே உதவியது நட்பா, உறவா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

எழிலி:

நண்பர்களே, வணக்கம். எல்லா வேளைகளிலும் நண்பர்கள் உதவுவதில்லை. பெரும்பாலும் உறவுகளே அதிகம் உதவுகின்றனர். பெரியப்பா, சித்தப்பா, மாமா பெரியம்மா, சின்னம்மா, அத்தை இன்றும் எத்தனை எத்தனை உறவுகள் உள்ளனர். அவர்கள் அரவணைப்பில் வளர்ந்து வாழ்வு பெற்றவர்கள்தான் அதிகமாக இருக்க முடியும். என் தாத்தா, பெற்றோரை இழந்து அநாதையாக நின்றபோது, அவரது தூரத்து உறவினரான மாமாவும் மாமியும்தான் அவரைத் தங்கள் பிள்ளைகளோடு ஒரு பிள்ளையாக வளர்த்து ஆளாக்கியதை அவர் சாகும்வரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் குடும்பத்தின் உறவும் ஆதரவும் இன்றும் என்வரை தொடர்கிறது. எனவே, உறவுகளே உதவும் என முடிக்கிறேன். நன்றி. வணக்கம்.

மலர்விழி:

வணக்கம். எனக்குமுன் பேசியவர் உறவை ஆதரித்தார். இதிகாச காலம்முதல் இன்றுவரை உறவுகள், சொந்தங்களைப் போட்டு மிதிப்பதைத்தான் காணமுடிகிறது. பாண்டவர்களைத் துரியோதனன் கூட்டம் என்ன பாடு படுத்தியது! சகுனி தன் சகோதரியின் பிள்ளைகளை உறவாடியே அழித்தான் அல்லவா? நண்பனான கண்ணனால்தானே பாண்டவர் பிழைக்க முடிந்தது. இன்று பத்திரிகையைத் திறந்தால் உறவினர்களுக்குள் சொத்துத் தகராறால் வெட்டுக் குத்தைத்தானே பார்க்கிறோம். இதுதான் உறவுகளால் கிடைக்கும் நன்மை. பொதுவாக நண்பர்களே பலவகையிலும் துணை நிற்கிறார்கள் எனக் கூறி முடிக்கிறேன். வணக்கம்.

தலைவர்:

உங்கள் உரைகளைக் கேட்டு எல்லாரும் மகிழ்ந்தோம். உண்மையான பல செய்திகளைச் சொல்லி, அனுபவங்களைக் கூறி அவரவர் நிலைக்கு ஆதரவு தேடினீர்கள். நான் ஒன்று சொல்கிறேன். கவனியுங்கள்! நம் நாட்டில், “கொண்டு வந்தால் தந்தை! கொண்டு வந்தாலும் கொண்டு வராவிட்டாலும் தாய்! சீர் கொண்டு வந்தால் சகோதரி! கொலையும் செய்வாள் பத்தினி! உயிர்காப்பான் தோழன்!” என்னும் கதைச் சொலவடை வழக்கு ஒன்று உண்டு. இதில் இருந்தே உறவுகளும், நட்பும் எத்தகையன என்பதை அறிந்து கொள்ளலாம். பொருள் கொண்டு வந்தால் ஆதரவு உண்டு. “இல்லானை இல்லாளும் வேண்டாள்! ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்” என்பது ஒரு பழம்பாடல் வரி. உலகில் எல்லாவகை மக்களும் உள்ளனர். உறவுகளை உறவுகள் ஆதரிப்பதும் உண்டு; வெறுத்து நசுக்குவதும் உண்டு! நண்பர்களை நண்பர்கள் ஆதரிப்பதும் உண்டு; உறவாடி வஞ்சகமாகக் கெடுப்பதும் உண்டு! இது உலகத்து இயற்கை. உறவோ நட்போ இல்லாத மிகச் சிலர் இந்தச் சமுதாயத்தில் இன்னார் இனியர் என்னாது தேவைப்பட்டபோது உதவிக்கரம் நீட்டுவதும் உண்டு. அத்தகைய நல்லோர்களால்தான் உலகம் வாழ்கிறது என்பதை “பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்” என்று வள்ளுவர் கூறுவார். நீங்கள் எல்லாரும் பண்புடை மக்களாக வாழ்ந்து, பயன்பட வாழுமாறு கூறி வாழ்த்தி அமர்கிறேன். வணக்கம்.

 

எண்ணங்களை எழுத்தாக்குக.

குறைந்த பொருள்களும் நிறைந்த மனிதர்களும்
உடையது பண்டைய குடும்பம்! குறைவான மனிதர்களும்
நிறைய பொருள்களும் இருப்பது நவீன குடும்பம்!
சேர்ந்து வாழ்ந்ததும் சேர்ந்து உண்டதும்
அன்றைய குடும்பம்! தனித்தே வாழ்வதும்
தனித்தே உண்பதும் இன்றைய குடும்பம்!
மணவிழா ஊர்விழா போன்றவற்றில்
ஊரே திரண்டிருக்கும் பழங்காலக் குடும்பம்!
பக்கத்து வீட்டில் கொலை நடந்தாலும்
காணாமலிருப்பது புதிய குடும்பம்!
எங்கே போகிறோம், நாமும் நமது குடும்பமும்?

பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.

எ -கா: குமரன் வீடு பார்த்தேன். – குமரனை வீட்டில் பார்த்தேன்.

1. மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.

விடைகுறிப்பு: மாறனைப் பேச்சுத்திறனில் யார் வெல்ல முடியும். / மாறனின் பேச்சுத் திறனை யாரால் வெல்ல முடியும்.

2. போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.

விடைகுறிப்பு: போட்டியில் வெற்றி பெற்றதால், கலைச்செல்விக்குப் பாராட்டுகள் குவிந்தன.

3. காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.

விடைகுறிப்பு: காலையில் எழுந்து படித்தால், நமக்கு நன்மை ஏற்படும்.

4. சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.

விடைகுறிப்பு: சான்றோருக்கு மதிப்புக் கொடுத்தால், வாழ்வில் உயரலாம்.

 

செய்து கற்போம்.

உங்கள் குடும்ப உறவு வழிமுறைகளைக் கொண்டு குடும்ப மரம் ( Family tree) வரைக.

நிற்க அதற்குத் தக.

கீழ்க்காணும் செயல்பாடுகளைச் சரி / தவறு எனப் பிரித்து, சரியெனில் காரணமும், தவறு எனில் மாற்றுவதற்குரிய செயலையும் ஒப்பிடுக.

படிப்போம், பயன்படுத்துவோம்!

  • Nuclear family – தனிக்குடும்பம்
  • Matriarchy – தாய்வழிச்சமூகம்
  • Culture – பண்பாடு
  • Habitat – வாழிடம்

அறிவை விரிவு செய்.

  • கம்பர் யார்? – வ.சுப. மாணிக்கம்
  • சக்கரவர்த்தித் திருமகன் – இராஜாஜி
  • ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள்
  • வயிறுகள் – பூமணி (சிறுகதைத் தொகுப்பு)

Leave a Reply